தினம் ஒரு கதை - நன்னெறி

 துறவி ஒருவர் ஒரு ஊருக்கு சென்றார்..


பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்று சென்றனர்..


இளைஞன் ஒருவன் வந்தான் சாமி எனக்கு ஒரு சந்தேகம்.. உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர்..

ஆனால் இன்றும் மனிதன் தீயவழியில் தான் செல்கிறான்.. உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன்..?? என்று கேட்டான்..


துறவி  அவனிடம் சொன்னார்..

தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான் தங்கி இருப்பேன், நான் இந்த ஊரை விட்டு செல்லும் பொழுது நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன், அதற்கு முன் ஒரு வேலை செய்..


ஒரு குதிரையை கொண்டு வந்து இந்த கோயில் மண்டபத்தில் கட்டி வை..

நான் ஊரைவிட்டு செல்லும் வரை குதிரை அங்கேயே கட்டி இருக்கட்டும்..


தினமும் இரவு அதற்கு உணவு வைத்து விடு என்று சொல்லி விட்டு அருகில் உள்ள சத்திரத்துக்கு சென்றார்..


மறுநாள் காலை துறவி அந்த கோயில் மண்டபத்திற்கு வந்தார்..


அப்பொழுது அந்த இளைஞன் அந்த குதிரையை சுத்தி இருந்த சாணத்தையும், அது மிச்சம் வைத்த உணவு குப்பைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தான்..


இவ்வாறு நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தன..


அடுத்த நாள் காலை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த இளைஞரிடம் வந்தார் துறவி..

தினமும் நீ சுத்தப் படுத்தினாலும்.. இந்த இடத்தை குதிரை மீண்டும் மீண்டும் அசுத்தம் செய்து விடுகின்றதே.. பிறகு ஏன் தேவை இல்லாமல் சுத்தம் செய்கிறாய்..?? என்று கேட்டார்..


அதற்கு அவன்,

என்ன சாமி எல்லாம் தெரிஞ்ச நீங்க இப்படி கேட்க ரீங்க..?


திரும்ப திரும்ப அசுத்தம் ஆவுதுனு சுத்தப்படுத்தாம இருக்க முடியுமா..?


இதை கேட்ட துறவி  அப்போது சொன்னார் தம்பி அன்று நீ என்னிடம் கேட்ட கேள்விக்கு, இதுதான் பதில்..


நீ இப்போது செய்யும் வேலையைத் தான் நானும் செய்கிறேன், அசுத்தமான இடத்தை நீ மீண்டும் மீண்டும் சுத்தம் செய்வது போல், மனிதர்களை நல்வழி படுத்தும்  செயலை பெரியோர்கள் இடைவிடாமல் செய்வார்கள்..


இளைஞன் கேட்டான்.. சாமி இதற்கு நிறந்தர தீர்வு என்ன..?


அவர் உடனே அங்கு கட்டி இருந்த குதிரையை அவிழ்த்து விட்டு விரட்டினார்,


பின்பு அந்த இளைஞனைப் பார்த்துக் கேட்டார்..

இனி இந்த இடம் அசுத்தம் ஆகுமா..?


ஆகாது சாமி.. என்றான்..


துறவி  கூறினார்.. உன் கேள்விக்கு இதான் பதில்..


நீ செய்த வேலையைப் போல் நாங்கள் மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்..


இப்பொழுது, நான் செய்த வேலையைப் போல்.. என்று மனிதன் தன்னிடம்  இருக்கும் தீய எண்ணம் என்ற குதிரையை வாழ்வில் இருந்து விரட்டி விடுகிறானோ,  அப்பொழுதே எங்களின் சுத்தப் படுத்தும் கடமை முடிந்து விடும், அன்று வரை மனிதனை நன்னெறி படுத்துவது ஆன்மிகத்தின் கடமை என்றார்..!

Post a Comment

0 Comments