தினம் ஒரு கதை -நூறு ஒட்டகங்கள்...

நூறு ஒட்டகங்கள்...
___________________

"ஓடிக்கொண்டே இருக்கிறேன்..

 பல பிரச்சனைகள். 

 வீட்டில், தெருவில், ஊரில், வேலை செய்யும் இடத்தில் என எங்குமே பிரச்சனைகள்..

 தூங்கமுடியவில்லை..

 எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்" 

 என்றவாறே  முனிவரின் முன்பாக நின்றிருந்தான் அவன்.

அப்போது மாலை நேரம்.

முனிவர் அவனிடம்  "தோட்டத்திற்கு சென்று ஒட்டகங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன என பார்த்துவிட்டு வா" என்றார்.

சென்றவன் திரும்பி வந்து , "100 ஒட்டகங்களும் நின்றுகொண்டு இருக்கின்றன" என்றான்.

"நல்லது. அந்த 100 ஒட்டகங்களும் தரையில் படுத்தவுடன் அங்கே இருக்கிற ஓய்வறையில் நீ படுத்து தூங்கிவிட்டு காலையில் திரும்பி வா.. " என்றார்..

"சரி அய்யா" என்றவாறு தோட்டத்திற்கு போனவன் கண்களில் தூக்கமின்றி களைப்புடன் காலையில் திரும்பி வந்து "அய்யா.. இரவு முழுவதும் தூங்கவே இல்லை .. " என்றான்..

"என்ன ஆச்சு?" என்றார் முனிவர்..

 "சில ஒட்டகங்கள் தானாகவே தரையில் படுத்துவிட்டன.. 

சில ஒட்டகங்களை நான் மெனக்கெட்டு படுக்கவைத்தேன். 

ஆனால் அனைத்து ஒட்டகத்தையும் படுக்கவைக்க முடியவில்லை. 

சிலது படுத்தால் சிலது எழுந்து கொள்கின்றன..

 அனைத்து ஒட்டகத்தையும் ஒட்டுமொத்தமாக படுக்கவைக்க முடியவில்லை. அதனால நான் தூங்குவதற்கு  போகவே இல்லை" என்றான்.

முனிவர் சிரித்தபடியே "இதுதான் வாழ்க்கை.. வாழ்க்கையில் பிரச்சனையை முடிப்பது என்பது ஒட்டகத்தை படுக்க வைப்பது போன்றது.. 

சில பிரச்சனைகள் தானாக முடிந்துவிடும்.. சிலவற்றை நாம் மெனக்கெட்டு முடித்துவிடலாம்.. ஆனால் சில பிரச்சனைகள் முடிந்தால் வேறு சில பிரச்சனைகள் புதிகாக எழலாம்... 

அனைத்து பிரச்சனையும் முடிந்தால்தான் நிம்மதியாக தூங்குவேன் என்றால் இந்த உலகத்தில் யாராலும் தூங்கமுடியாது..

பிரச்சனைகள் அனைத்தும் எப்போது முடியும் என கவலைப்பட்டுக் கொண்டே இருக்காதே.. 

 தீர்க்கமுடிந்தவற்றை தீர்த்துவிட்டு, மற்றவற்றை காலத்தின் கைகளில் ஒப்படைத்துவிட்டு உனக்கான ஓய்வறையில் நிம்மதியாக இருக்க கற்றுக்கொள் " என்றார்..

முனிவரை வணங்கிவிட்டு சென்றவன் சிலநாள் கழித்துவந்து முனிவரிடம்  "சில ஒட்டகங்கள் படுக்கவில்லை என்றாலும் நான் நிம்மதியாக படுத்து உறங்குகிறேன்.." என்றான்.

வாழ்வில் பிரச்சனைகள் என்பது நூறு ஒட்டகங்கள் போன்றது... 

அனைத்தும் ஒரே நேரத்தில் படுப்பதற்கான வாய்ப்பு குறைவே.. 

 ஒவ்வொன்றும் படுப்பதற்கான காலம் உள்ளது...

 அப்படியே நமக்கான பிரச்சனைகள் தீர்வதற்கான காலமும் உள்ளது..  

ஆகவே சிலவற்றை காலத்தின் கரங்களில் ஒப்படைத்துவிட்டு, வாழ்வை அமைதியாக அனுபவிப்போம்.

Post a Comment

0 Comments