பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடு - 24.01.2024



 நாள்: 24-01-2024

கிழமை:  புதன்கிழமை 



திருக்குறள்


பால் :அறத்துப்பால்

இயல்: துறவறவியல்

அதிகாரம்: நிலையாமை


 குறள் :340


யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்.


விளக்கம்:


 எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.


 பழமொழி : 


Man proposes and God disposes


மனிதன் ஒன்று நினைக்க, கடவுள் ஒன்று நினைக்கும்


 இரண்டொழுக்க பண்புகள் : 


1.முயற்சியும், தொடர் பயிற்சியும்   வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை நான் அறிவேன்.    


2.எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்து படிப்பேன்


 பொன்மொழி : 


மனிதர்களாகிய நமது மிகப்பெரிய திறமை இந்த உலகை மாற்றுவது அல்ல, மாறாக நம்மை நாமே மாற்றிக் கொள்வது. மகாத்மா காந்தி 


 பொது அறிவு : 


1. உலகின் மிகப்பெரிய ராணுவத்தை கொண்ட நாடு எது?


விடை: சீனா 


2. உலகின் மிகப்பெரிய உப்பு ஏரி எந்த நாட்டில் உள்ளது?


விடை: ரஷ்யா 


 English words & meanings : 


 oust - removing from a position or offce


 ஆரோக்கிய வாழ்வு : 


மணத்தக்காளி :மணத்தக்காளிக் கீரையின் சாறு காய்ச்சல் மற்றும் காய்ச்சலால் ஏற்படும் கை, கால் வலிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது.


 ஜனவரி 24 


 தேசிய பெண் குழந்தை நாள் 


தேசிய பெண் குழந்தை நாள் (National Girl Child Day) இந்தியாவில் 2009 ஆண்டு முதல் ஜனவரி 24 ஆண்டு தோறும் அன்று கொண்டாடப்படுகிறது.. இந்நாள் கொண்டாடுவதின் மூலம் பாலின சமத்துவம், சமவேலைக்கு சமஊதியம் போன்ற கருத்துக்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இது பெரிதும் உதவும். மேலும் பெண்கள் மேம்பாட்டிற்கான திட்டங்கள் பற்றியும் பொதுமக்களுக்கு ஊடகம், செய்தித்தாள், வானொலி மற்றும் தொலைக்காட்சி வழியாக தகவல் அரசாங்கத்தால் அளிக்கப்படுகிறது


 நீதிக்கதை 


 பேராசையின் ஆபத்து 


 காட்டில் இரண்டு நரிகள் நண்பர்கள் இருந்தன.எங்கு சென்றாலும் இரண்டும் சேர்ந்தே செல்லும். இணை பிரியாத தோழர்கள். எதையும் சாப்பிட்டாலும் ஒன்றாகத் தான் சாப்பிடும். தூங்கினாலும் ஒன்றாகத் தான் தூங்கும்.


ஒருநாள் இரண்டும் காடு முழுவதும் அலைந்தன. அதற்குத் தேவையான உணவு கிடைக்கவே இல்லை. இதற்கு மேல் பசியைப் பொறுத்துக் கொள்ள முடியாது என முடிவு செய்தன.


கிராமத்தின் எல்லைக்குச் சென்று பார்ப்போம். எதாவது ஆடு, கோழி கிடைக்கும் வாய்ப்பு இருக்கும் என்றபடி கிளம்பின.


கிராமத்தின் எல்லையில் கோழிப் பண்ணை ஒன்று இருக்கக் கண்டு மிகவும் மகிழ்ந்தன. உள்ளே நிறைய கோழிகளும், கோழிக் குஞ்சுகளும் கொக். கொக்..கென குரல் கொடுத்து, மகிழ்ச்சியாக தானியத்தைக் கொத்திச் சாப்பிட்டுக் கொண்டு இருந்தன.


அதைப் பார்த்ததும் ஒரு நரிக்கு வாயில் நீர் ஊறியது. "வா உடனே சென்று அனைத்தையும் அடித்து சாப்பிட்டு விடுவோம்" என்றபடி வேகமானது.


"சற்றுப் பொறு தோழா" என அதன் வேகத்தை நிறுத்தியது மற்றொரு நரி. "என் நிலைமை புரியாமல் இப்படி தடுக்கின்றாயே" என அவசரப்பட்டது நண்பன் நரி.


நிலைமை புரியாமல் தான் தடுமாறுகிறாய்"


"என்ன சொல்கிறாய்"


"பண்ணையில் மனிதர்கள் யாரும் இருந்தால், நம் நிலைமை என்ன ஆகும் என்பதை உணர்ந்தாயா"


"ஆமாம்... ஆமாம்... நீ சொல்வது தான் சரி, நான் தான் புரியாமல் அவசரப்பட்டு விட்டேன், நல்ல வேளை!"


இரண்டு நரிகளும் வேலி ஓரம் பதுங்கி நின்று நோட்டமிட்டன. சற்று முற்றும் பார்த்தன. கண்களுக்கெட்டிய தூரம் வரை மனித நடமாட்டம் இல்லாமல் இருந்தது. நிம்மதியடைந்து மகிழ்ச்சி அடைந்தன.


மெதுவாக அடியெடுத்து கோழிப் பண்ணைக்குள் வந்தன. அங்கு கோழிகள் அடைத்து வைத்திருந்த, பெரிய கூண்டின் கதவைத் திறந்து உள்ளே சென்றன.


நரிகள் உள்ளே சென்றதும், அதைக் கண்ட கோழிகள் பயந்து சிறகுகளை அடித்துக் கொண்டன. கொக்... கொக்... கென பலமாகக் கத்தின. பெரிய கூண்டுக்குள்ளேயே கோழிகள் அங்கும் இங்குமாகப் பறந்தன.


அவைகளைப் பார்த்த நரிகளுக்கு கொண்டாட்டம் தான். நரிகள் தன்னிடம் சிக்கிய கோழிகளை பிடித்துக் கொன்று தின்றன.


ஒரு நரி தன் தேவைக்கு மட்டும் கோழிகளைப் பிடித்து உண்டது.


மற்றொரு நரி கண்டபடி தின்றது.


''ஏன் இப்படி அளவுக்கு அதிகமாக சாப்பிடுகிறாய்  போதும் கிளம்பு."


அவசரப்படுத்தியது ஒரு நரி


"சற்று பொறு இன்னும் எனக்கு வேண்டிய அளவு தான் சாப்பிட்டு விட்டு வருவேன். உனக்குப் போதும் என்றால் நீ போகலாம்" என்று கூறவே, அளவுடன் சாப்பிட்ட நரி நாளை மீண்டும் வரலாம் என நினைத்துக் கிளம்பியது.


"சரி, நான் போய் வருகிறேன். இங்கேயே இருந்து விடாமல் விரைவில் காட்டுக்கு வந்து விடு. மனிதர்கள் வந்து விட்டால் உன்னைக் கொன்று விடுவார்கள்."


அந்த நரி காட்டிற்குள் சென்று விட்டது.


கோழிகளை அதிகம் சாப்பிட்ட நரி, உண்ட மயக்கத்தால் வெளியே செல்லாமல் அப்படியே படுத்து விட்டது.


அளவுக்கு அதிகமாக உண்டதால் மயங்கி விட்டது. அப்படியே தூங்கி விட்டது.சிறிது நேரத்தில் கோழிப் பண்ணையின் உரிமை யாளரும், வேலைக்காரர்களும் வந்தனர்.


பெரிய கூடாரத்தினுள் எங்கு பார்த்தாலும் கோழிகளின் இரத்தமும், சிறகுகளுமாகக் கிடந்தன. மனிதர்களைக் கண்ட கோழிகள் கொக்... கொக் கென கத்த ஆரம்பித்தன.


அவர்கள் சுற்றும் முற்றும் பார்த்தனர். ஒரு மூலையில் நரி தூங்கிக் கொண்டு இருப்பதைப் பார்த்தார்கள்.


நரியின் செயல் கண்டு ஆத்திரம் அடைந்தனர். நரியைப் பிடித்து கொன்று விட்டனர்.


மறுநாள் ஏதாவது நரி வரலாம் என வேலைக் காரர்கள் பதுங்கி இருந்தனர். மற்றொரு நரி, இந்த நரியைத் தேடியும் கோழியைப் பிடிக்கவும் உள்ளே நுழைந்தது. உடனே காவலர்கள் அந்த நரியையும் விரட்டிப் பிடித்துக் கொன்றனர்.


அதிக ஆசையினால் இரண்டும் இறந்தது.


நீதி : பேராசை பெரும் நஷ்டம். அளவுக்கு மீறி ஆசைப்படுபவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. தகுதிக்கு மீறிய ஆசையை விட்டு விடுங்கள். அது துன்பத்தையே தரும்.


 இன்றைய செய்திகள் 


 24.01.2024 


*உலக சுகாதார அமைப்பு: தென்கிழக்கு ஆசியாவின் மண்டல இயக்குனராக சைமா வஜேத் நியமனம்.


*பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு.


*சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. மூன்று பேர் உயிரிழப்பு.


*ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு.


*இந்திய கிரிக்கெட் அணியின் மூத்தவீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பிசிசிஐ விருதுகள் விழாவில் இரண்டு முக்கிய விருதுகளை வென்று அசத்தியிருக்கிறார்.


 Today's Headlines 


*World Health Organization: Saima Wajed is appointed as Regional Director for South-East Asia.


 * Bharat Ratna award to former Bihar Chief Minister Karpuri Thakur.


 * Powerful earthquake in China recorded at 7.2 on the Richter scale.  Three people died.


 *Incentive Notification for Ration Shop Employees.


 * Veteran Indian cricketer Ravichandran Ashwin won two major awards at the BCCI Awards.

Post a Comment

0 Comments