தினம் ஒரு கதை -அறிவு

நானும் என் நண்பன்  நேற்று மாலை விளையாட்டை முடித்துவிட்டு மைதானத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து வந்தது கொண்டிருந்தோம்.

அவன் என்னிடம் கேட்டான், "ஏன் மச்சி நேத்து இந்த உலகத்தில இருக்கும் எல்லாமும் எல்லாருக்கும் பொதுவானதுனு சொன்னியே" என்றான். 
ஆமா, சொன்னேன். அதில் என்ன சந்தேகம்? என்று அவனிடம் கேட்டேன்.

"இல்ல மச்சி... ஒருத்தன் அவனோட அறிவை பயன்படுத்தி ஒன்ன கண்டுபிடிக்கிறான். உதாரணமா, தாமஸ் ஆல்வா எடிசன் பல்பு கண்டுபுடிச்சாரு. அந்த கண்டுபிடிப்பு அவருக்கு தானே சொந்தம்? அவர் கண்டிபிடிச்ச பொருள் மூலமா வர லாபம் எல்லாம் அவருக்கு தானே முறைப்படி சொந்தம்?" என்றான்.

உன்னிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீ அதற்கு நியாயமான பதில் சொல்லவேண்டும், என்று சொல்லிவிட்டு என் கேள்வியை ஆரம்பித்தேன்.

ஒரு மரத்தின் உயரத்தில் ஒரு பலாப்பழம் இருக்கிறது. மரத்தில் ஏறி் பறிக்க முடியாத மாதிரி மரத்திற்கு அடியில் முழுவதும் முள் செடிகள் இருக்கு. அந்த வழியே வந்த விறகு வெட்டி நீளமான மூங்கிலை வைத்து  தட்டி கீழே விழ வைக்க முயற்சி செய்தார். அவரால் முடியவில்லை. அந்த வழியா வந்த தச்சர், அந்த மூங்கிலை ஏணியாக செய்தார். ஏணியில் ஏறி பழத்தை பறிக்க முயற்சி செய்தனர். அப்படியும் முடியவில்லை.

அதே வழியாக வந்த ஆடு மேய்க்கும் இளைஞர் கையில் தொரட்டி இருக்கிறது. இருவரும் ஏணியை பிடிக்க அந்த இளைஞன் ஏணியில் ஏறி தொரட்டி மூலம் அந்த பழத்தை பறித்துவிடுகிறான். இப்போது அந்த பழம் யாருக்கு சொந்தம்? என்று ஜானிடம் கேட்டேன். "இதிலென்ன சந்தேகம்? அந்த மூவருக்கும் அந்த பழத்தில் உரிமை இருக்கிறது. மூவரும் சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும்" என்று பதிலளித்தான். 

சரியாக சொன்னாய்! இப்போது அறிவுக்கு வருவோம். மின்சாரம் விளக்கை தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடிக்க அதற்கு முன் மின்சாரம் கண்டுபிடித்திருக்க வேண்டும். மின்சாரத்தை கடத்தும் உலோக கம்பிகள்; உலோகங்களை கண்டுபிடிக்க வார்ப்பு முறை; வார்ப்பு முறைக்கு நெருப்பு; நெருப்பு உண்டாக்கும் அறிவு மனிதனுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
இப்படி அனைத்து கண்டுபிடிப்புகளும் சேர்த்து தான் மின்விளக்காக ஒரு முழு வடிவமாக நமக்கு கிடைத்திருக்கிறது.

தாமஸ் ஆல்வா எடிசன் மின்விளக்கை கண்டுபிடிக்க இந்த சமூகத்தின் அறிவு தொகுப்பை அவர் எடுத்துக்கொண்டார். அதில் எடிசன் தனது அறிவு பங்களிப்பு கொடுத்து மின்விளக்காக சமூகத்திற்கு அளித்துள்ளார். இந்த சமூகத்தில் இருந்து பெறப்பட்ட அறிவு தொகுப்பு தான் அவர் மின்விளக்கை கண்டுபிடிக்க காரணம்.
 
 இப்போ சொல்லு  ஒருவரின் அறிவு அவருக்கு மட்டும் சொந்தமா? சமூகத்திற்கு சொந்தமா?
"சமூகத்துக்கு தான் சொந்தம், மச்சி" என்றான்.

Post a Comment

0 Comments