தினம் ஒரு கதை - நம்மால் எதுவும் முடியும்..

*தன்னம்பிக்கை கதை* 

.

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்துப் போய் அருகில் இருந்த பூங்காவிற்குச் சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.

அப்போது சற்றுப் பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதைக் கண்டு

" ஏன் சோகமாக இருக்கிறீர்கள் " என்று அவரிடம் கேட்டார்.

அதற்கு இவர் " எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்துப் போய் விட்டேன் " என்றார்.

" எவ்வளவு ரூபாய் நஷ்டம் ? " என்றால் அவர்.

" 50 கோடி ரூபாய் " என்றார் இவர்.

" அப்படியா, நான் யார் தெரியுமா ? " என்றுக் கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வந்தரின் பெயரைச் சொன்னார்.

அசந்துப் போனார் இவர்...

" சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா ? " என்றுக் கேட்டார் அவர்.

உடனே முகமலர்ச்சியுடன் இவர் " ஆமாம் எல்லாம் சரியாகி விடும் " என்றார்.

பின் அந்த செல்வந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்துக் கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி " இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதை விட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒருவருடம் கழித்து இந்தப் பணத்தை எனக்கு நீங்கள் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன் " என்று சொல்லி விட்டு செக்கை இவர் கைகளில் திணித்து விட்டுச் சென்றார் அவர்.

பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்குச் சென்றார். தன் அறைக்குள் சென்று அந்தச் செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாகப் பூட்டினார். பின் தனது உதவியாரை அழைத்து அனைத்து ஊழியர்களை நிர்வாகக் கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்யச் சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

இந்த நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார். " நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது ஆனால் நான் அந்தப் பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது ? எதனால் ஏதற்காக ஏற்பட்டது ? என்று ஆராய்ந்து அதைக் களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்புக் கொடுங்கள் " என்றுக் கேட்டுக் கொண்டார்.

பின்னர் வேளைகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுப்பிடிக்கபட்டு களையப்பட்டன. மிகச் சரியாக அனைத்து ஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு மூச்சு செயல் சிந்தனை தூக்கம் அனைத்து அவருடைய தொழிலைப் பற்றியே இருந்தது.

மிகச் சரியாக ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. மிகச் சரியாக 550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம். அடுத்த நாள் விடியற்காலை அந்த செல்வந்தர் கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்தப் பூங்காவிற்கு விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த அதே சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார். காலை நேரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வந்தரும் அவருக்கு அருகில் அவரைக் கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது. சில விநாடிகள் கழித்துப் பார்த்தால் அந்தப் பெண்மணி மட்டும் வருகிறார் அந்தச் செல்வந்தரைக் காணவில்லை.

இவர் சென்று அந்தப் பெண்மணியிடம் " எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர் ? " என்றார்...
அதற்கு அந்தப் பெண்மணி பதட்டத்துடன் " உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா? " என்றார்

இவர் " இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள் ?" என்றார்.

அந்தப் பெண்மணி " இல்லை அய்யா அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி இல்லாதவர், செக் தருகிறேன் என்றுச் சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழையச் செக்கை கிழித்துக் கையெழுத்திட்டு கொடுத்து விடுவார் " என்றார்.

ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்குப் பேச முடியவில்லை. அப்போ நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மைக் காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்தார்.

இதிலிருந்து நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால் எந்த ஒரு விஷயமும் நம்மால் முடியும் என்று முதலில் நாம் நம்ப வேண்டும் அப்போது தான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும்.

" வாழ்வில் நீ முன்னேறு - நாளை நீ வரலாறு. " என்ற கூற்று நிச்சயம் ஒருநாள் உண்மையாகும்...

 *கதையின் நீதி :-* 

விடியும் என்று விண்ணை நம்புங்கள்...
முடியும் என்று உங்களை நம்புங்கள் *முயன்றால் முடியாதது எதுவுமில்லை*
*முடியும்*.
*முடியும் என்றால் நிச்சயம் முடியும்*
#Story
#Tamil story 

Post a Comment

0 Comments