தினம் ஒரு கதை

ஒரு இளைஞன். வசதியான குடும்பம். அவனுக்கு வாழ்க்கையில் நிம்மதி இல்லை. வாழவே பிடிக்கவில்லை. எல்லாமே வெறுத்து போய் விட்டது. 

என்ன பண்ணலாம் என்று யோசித்தான். ஒரு குருவைத் தேடிப் போனான். 

அவரிடம் தான் வந்த விவரத்தைச் சொல்லி ஏதாவது வழி சொல்லுங்கள் என்று கேட்டான்.

அவர் பார்த்தார் சரி அதற்கு முன் உன்னைப் பற்றி கொஞ்சம் சொல்! எவ்வளவு படித்திருக்கிறாய்? உனக்கு என்ன தெரியும் ?
என்று கேட்டார். 

சுவாமி நான் ஒழுங்காக படிக்கவில்லை. எதுவும் தெரியாது. ஆனால் கொஞ்சம் சதுரங்கம் ஆட தெரியும் அவ்வளவுதான் என்றான்.

குரு கொஞ்சம் யோசனை செய்தார். பக்கத்திலிருந்த ஒரு சீடனை கூப்பிட்டார். 

அவரிடம் ஒரு சீடனின் பெயரைச் சொல்லி நீ உடனே போய் அவரை இங்கே அழைத்து வா என்றார். வரும்போது ஒரு சதுரங்கப் பலகையையும் விளையாடுவதற்கான காய்களையும் எடுத்துக்கொண்டு வா!
சீடர்கள் எல்லோரையும் இங்கே வரச்சொல் என்றார்.

கொஞ்ச நேரத்தில் எல்லோரும் வந்து சேர்ந்தார்கள்.
சதுரங்கப் பலகையைக் கொண்டு வந்து வைத்தார்கள். 
அந்த சீடரும் வந்து சேர்ந்தார். 

குரு அவரை அருகில் கூப்பிட்டு கொஞ்ச நேரம் சதுரங்கம் ஆட வேண்டும் என்றார். 

அந்த சீடனிற்கு சதுரங்கம் என்றாலே என்னவென்றே தெரியாது. இருந்தாலும் மறுப்பு எதுவும் சொல்லவில்லை. 

குரு சொன்னார் நீர் என்னுடைய சீடர். 
என் பேச்சை மறக்காதவர். உம்முடைய அடக்கத்தையும் பணிவையும் நான் அறிவேன். எனக்காக உயிரையும் கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறீர்கள். இப்போது அதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. அந்த இளைஞனுடன் சதுரங்கம் ஆட வேண்டும். தோற்றுப் போனால் இந்த வாளால் தலையை சீவி விடுவேன். இறந்தால் சொர்க்கம் நிச்சயம். நீங்கள் வெற்றி பெற்றுவிட்டால் தோற்றுப்போன இந்த இளைஞனின் தலையைச் சீவி விடுவேன். சரி இப்போது நீங்கள் ஆட்டத்தை ஆரம்பிக்கலாம் என்றார்.

 ஆட்டம் ஆரம்பமாகியது அந்த சீடனின் முகத்தில் சலனமே இல்லை. 
சாவை பற்றி கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. எதுவும் புரியவில்லை என்றாலும் குருவின் கட்டளை என்பதால் ஏதோ ஒரு காய் நகர்த்திக் கொண்டிருந்தார். 

சுற்றியிருந்த சீடர்கள் முகத்தில் திகில்... பயம்... 
பாவம் நிலமை இப்படி ஆகிவிட்டதே என்கின்ற கவலை. குருவின் கையிலே பெரிய வாள் பளபளப்பாக இருந்தது.

சீடன் காய் நகர்த்துவது ஆரம்பத்தில் ஆச்சரியமாக தெரிந்தாலும் அவருக்கு சதுரங்கம் பற்றி எதுவுமே தெரியாது என்பது இளைஞனுக்கு  புரிந்தது. அவனுக்கு உற்சாகம் வந்துவிட்டது சுறுசுறுப்பாக காய்களை நகர்த்த ஆரம்பித்தான். 

சீடர் கொஞ்சம் கொஞ்சமாக தோற்றுக் கொண்டே வந்தார். 

சுற்றியிருந்த சீடர்கள் முகத்தில் சொல்லமுடியாத வேதனை. இளைஞன் முகத்தில் மகிழ்ச்சி. நிமிர்ந்து பார்த்தான். எதிரில் இருந்த சீடனின் முகத்தைப் பார்த்ததும் அவனுக்கு ரொம்ப பாவமாக இருந்தது. அந்த முகத்தில்தான் எவ்வளவு சாந்தம். எவ்வளவு இனிமை. அவர் கண்களில் எவ்வளவு கருணை. இவர் சாகத்தான் வேண்டுமா? இளைஞன் யோசிக்க ஆரம்பித்தான்.

நான் இறந்து போனால் யாருக்கும் எந்த வியப்பும் இல்லை. வீணாகிப் போன தன் வாழ்வும் சாவும் யாரையும் பாதிக்காது. ஆனால் துறவியான கருணை மிக்க இவர் இறந்தால் அது எவ்வளவு பெரிய வியப்பு. அதற்கு நாம் காரணமாக இருப்பதா? இப்படி நினைத்தான். 

அந்த இளைஞன் உடனே கன்னா பின்னா என்று விளையாட ஆரம்பித்தான். தான் தோற்றுப் போக வேண்டும் என்று முடிவெடுத்தான்.

அதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குரு சதுரங்கப் பலகையை கவிழ்த்தார். காய்கள் எல்லாம் சிதறிப் போய் விட்டன. எல்லோரும் திகைத்துப் போனார்கள்.

யாருக்கும் வெற்றி தோல்வி இல்லை என்று அறிவிக்கிறேன் என்றார் குரு.  

உன்னுடைய மன ஒருமைப்பாட்டை கவனித்தேன். முழுமையாக ஆட்டத்திலே மூழ்கி போனதையும் பார்த்தேன். கடைசியில் உயிர்த்தியாகம் செய்ய முடிவெடுத்து தாறுமாறாக ஆடியதையும் கவனித்தேன்.

வாழ்க்கை என்ன என்பதும் எந்த வாழ்க்கை பயனுள்ள வாழ்க்கை என்பதும் உனக்கு புரிந்துவிட்டது. இப்போது இங்கே அதை நீ கற்றுக் கொண்டாய். உன்னுடைய மனம் பக்குவ நிலையை அடைந்துவிட்டது. தியாகம் உன் இதயத்தில் குடி கொண்டுவிட்டது. அது எங்கிருந்தும் வரவில்லை. உனக்குள் இருந்துதான் அது வந்தது. அதை நீ அடையாளம் கண்டு கொண்டாய். இனிமேல் கொஞ்ச காலம் நீ இங்கே இருந்துவிட்டுப் போகலாம். உன்னுடைய வாழ்வு பயனுள்ள வாழ்வாகும் என்றார் அந்த குரு.

Post a Comment

0 Comments