தினம் ஒரு கதை - தேவையற்ற நிகழ்வுகள்


ஒரு நாள், பேராசிரியர் ஒருவர் தனது வகுப்பறையில் நுழைந்து மாணவர்களை திடீர் தேர்வுக்குத் தயாராகும்படிக் கூறினார். மாணவர்கள் ஆர்வத்துடன் அவரவர் இடத்தில் காத்திருந்தனர். 

ஆசிரியர் கேள்வித்தாள்களை வழக்கம் போல அனைவருக்கும் கொடுத்தார். கேள்வித்தாளைப் பெற்ற அனைத்து மாணவர்களும் ஆச்சரியமடைந்தனர் 

அதில் கேள்விகள் ஒன்றுமே இருக்கவில்லை; வெள்ளைக் காகிதத்தின் மையத்தில் ஒரு கருப்புப் புள்ளி மட்டுமே இருந்தது. 

அனைத்து மாணவர்களின் முகத்திலும் வெளிப்பட்ட ஆச்சரியத்தைக் கண்ட பேராசிரியர், “நீங்கள் கேள்வித்தாளில் பார்ப்பதைப்  பற்றி எழுத வேண்டும். இதையே நான் 
எதிர்பார்க்கிறேன்” என்றார்.

குழப்பமடைந்த மாணவர்கள் தங்களின் முயற்சியைத் தொடங்கினர். தேர்வின் முடிவில், பேராசிரியர் எல்லோருடைய விடைத்தாளையும் பெற்றுக் கொண்டார். ஒவ்வொரு மாணவரின் உரையையும் உரத்த குரலில் வாசித்தார். 

விதிவிலக்கின்றி அனைவரும், தாளின் நடுப்பகுதியில் இருந்த கருப்புப் புள்ளி மற்றும் அதன் அமைப்பைப் பற்றி மட்டுமே விவரிக்க முயற்சித்து இருந்தனர். 

அனைத்து விளக்கங்களையும் படித்து முடிக்கும் பொழுது வகுப்பறை அமைதியாக இருந்தது. இப்போது பேராசிரியர், “இந்தப் பயிற்சி உங்களை சோதிப்பதற்காக அல்ல, சிந்திக்க வைப்பதற்காகவே நடத்தினேன்.

காகிதத்தின் வெள்ளைப் பகுதியைப் பற்றி எவருமே எழுதவில்லை. எல்லோரும் கருப்பு புள்ளியில் மட்டுமே கவனம் செலுத்தி இருக்கிறீர்கள். 

இதே தான் நம் வாழ்விலும் நடக்கிறது. நம் வாழ்வில், காகிதத்தின் வெள்ளை பகுதியைப் போல, நாம் கவனிக்கவும் அனுபவிக்கவும் நிறைய இருக்கிறது; ஆனால் நாம் எப்போதும்  பிரச்சனைகளை மட்டுமே கவனிக்கிறோம்...

சுகாதாரக் கேடு, 
பணப்பிரச்சனை, குடும்ப உறுப்பினரின் சிக்கல்கள், நட்பில் ஏமாற்றம் போன்றவற்றால் பாதிப்படைந்து அதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறோம். 

நம் வாழ்வில் உள்ள அனைத்தையும் ஒப்பிடும் போது கரும்புள்ளிகள் மிகவும் சிறியவையாகவே இருக்கின்றன, 

ஆனால் அவைகளே நம் மனதை மாசு
படுத்துகின்றன. வாழ்வில் உள்ள கருப்பு புள்ளிகளில் இருந்து கவனத்தை விடுவித்துக் கொள்ளுங்கள் என்றார்..

*ஆம்.,நண்பர்களே.,*

*ஒவ்வொரு நாளும், நம்மை நாம் புதுப்பித்துக் கொள்வதும், நம்மைச் சுற்றியிருக்கும் நட்புகளுக்கும், உறவுகளுக்கும் நம் வாழ்வின் ஆதாரத்தை வழங்குதலும் நம் கடமையாகும்.* 

*எதிர்மறையான செயல்களில் கவனம் செலுத்துவதை விட வாழ்க்கையில் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான தருணங்களையே பார்க்க வேண்டும்.* 

*வாழ்க்கையின் தேவையற்ற நிகழ்வுகளைச் சிந்தித்து நேரத்தை வீணாக்குவதால், வாழ்க்கையில் உண்மையான பல பேரின்பங்களை இழக்கிறோம்.* 

*நாம் மகிழ்ச்சியாக இருந்து, அன்போடு வாழ்க்கையை* *வாழ்வதில் கவனம் செலுத்துவதே* *வாழ்வதற்கான சிறந்த வழி.*

Post a Comment

0 Comments