தினம் ஒரு கதை - வலி வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும்

பறவை இனத்திலேயே கழுகுக்கு மட்டும்தான் 70 ஆண்டு ஆயுட்காலம். 70 ஆண்டுக் காலம் வாழ வேண்டுமென்றால், அது 40 வயதில் தன்னையே உருமாற்றம் செய்ய வேண்டும்.

கழுகு தன் 40 வயதை அடையும்போது, அதன் அலகு இரையைப் பிடிப்பதற்கும், உண்பதற்கும் பயனற்றதாகிவிடும். அதன் அலகும் வளைந்து விடும். அதன் இறக்கைகளும் தடித்து, பறப்பதற்குக் கனமாக மாறிவிடும்.

இந்த நிலையில், ஒன்று இறப்பது அல்லது வலிமிக்க நிகழ்ச்சிக்குத் தன்னையே உட்படுத்துவது இவை தான் கழுகுக்கு முன் இருக்கும் வாய்ப்புகள்.

கழுகு என்ன செய்யும் தெரியுமா? இந்தக் காலத்தில், உயர்ந்த மலைக்குப் பறந்து சென்று அங்கிருக்கும் பாறையில் தன் அலகைக் கொண்டு வேகமாக மோதி அலகை உடைக்கும். புதிய அலகு வளரும் வரை தன் கூட்டிலேயே தனித்திருக்கும்.

புதிய அலகு வளர்ந்த பின் இறகுகளைத் தானே பிய்த்தெடுக்கும். ஐந்து மாதங்களுக்குப் பின் புதிய இறகுகள் முளைக்க ஆரம்பிக்கும்.

இந்த மாற்றத்துக்குச் சுமார் 150 நாட்கள் ஆகும். அத்தனை நாட்கள் காத்திருந்து, வலியை அனுபவித்து, மறுபிறவி அடைந்த கழுகு இன்னும் 30 ஆண்டுகள் வாழத் தகுதியுள்ளதாக மாறும்.

வாழ்க்கையில் இதுதான் கடைசி என்று நினைப்போம். ஆனால், அந்த வாழ்க்கையைப் புதுப்பிக்க வாய்ப்புக் கிடைக்காமல் போகாது. ஆனால், அந்த வாய்ப்பு வலியோடு வரலாம். அதைத் தாங்குவதற்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், அதை ஏற்றுக்கொண்டு அதைத் தாண்டி வந்தால் நமக்கும் மறுபிறவி கிடைக்கலாம். அதற்குப் பிந்தைய வாழ்க்கை மகிழ்ச்சி மிக்கதாக மாறிவிடலாம்.

Post a Comment

0 Comments