TNTET தாள்-1 தேர்வு முடிவுகள் – தேர்வு வாரியம் வெளியிட்ட தேர்ச்சி விவரம்! 15% பேர் மட்டுமே தேர்ச்சி!!!!?????


தமிழகத்தில் ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான டெட் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. அண்மையில் இத்தேர்வின் முடிவுகளும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்ச்சி சதவீதம் குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

டெட் தேர்வு:

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் TET தேர்வின் மூலம் நிரப்பட்டு வருகிறது. இந்த தகுதித்தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. தமிழகத்தில் கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்றால் கல்வித்துறை மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் TET தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது.

இதனையடுத்து 2022ம் ஆண்டு டெட் தேர்வை நடத்த கோரிக்கைகள் எழுந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிடபட்டது. அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் வரை TET முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள்களுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த அக்டோபர் மாதம் கணினி வாயிலாக இடைநிலை ஆசிரியர்களுக்கான TET முதல் தேர்வு நடைபெற்றது.

இதன் முடிவுகளை கடந்த 7ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் மொத்தம் 15% மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. 

அதாவது தேர்வு எழுதிய மொத்தம் 1,53,233 பேரில் 21,543 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தகவல் தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெட் ஏன்?

அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற விரும்பினால் அதற்குரிய தகுதித் தேர்வை எழுத வேண்டும் என்று மத்திய அரசு கடந்த 2009ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இது தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். இதையடுத்து 2010 முதல் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறும் நபர்களே ஆசிரியராக பணிபுரிய தகுதி பெற்றவர்கள்.

இடைநிலை ஆசிரியர் பணி

அதுவும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகளில் பணியாற்ற முதல் தாளும், 6 முதல் 10ஆம் வகுப்பு வரை பணியாற்ற இரண்டாம் தாளும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும். கடந்த 2010 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியராக பணி நியமனம் வழங்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் அதிகப்படியான இளைஞர்கள் பணியில் சேர்ந்தனர்.

ஆசிரியர் தகுதி தேர்வு

அதன்பிறகு அவ்வப்போது ஆசிரியர் தகுதி தேர்வு மட்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் பணி நியமனம் என்பது எட்டாக் கனியாக இருந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி சான்றிதழ் 7 ஆண்டுகள் வரை மட்டுமே செல்லுபடியாகும் என்று கூறப்பட்டது. இதனை வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் வகையில் மாற்றி தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

தகுதி சான்றிதழ் வெளியீடு

இதையடுத்து தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் சான்றிதழ், தகுதி சான்றுகள் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டெட் தாள் ஒன்று தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றை நேற்று (டிசம்பர் 22) முதல் பலரும் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். அடுத்தகட்டமாக பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு எப்போது என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக மாறியிருக்கிறது.

Post a Comment

0 Comments