தினம் ஒரு கதை - பெட்டிக்குள்ளே

முன்னொரு காலத்தில், மகத நாட்டை, யாழ்குமரன் என்ற
அரசர் ஆண்டு வந்தார். அவருக்கு, விவேகமிக்க மந்திரி
ஒருவர் இருந்தார்; அவர் பெயர் முத்துக்கூத்தன்.
அரசர் யாழ்குமரன், எங்கு சென்றாலும், முத்துக்கூத்தனை
அழைத்துச் செல்வார். முத்துக்கூத்தனின் ஆலோசனை படியே
அனைத்தையும் செய்வார். இதனால், மந்திரி முத்துக்கூத்தனின்
புகழ், நாடு முழுவதும் பரவியது. இதைக் கண்ட சிலர், மந்திரி
மீது பொறாமை கொண்டனர்.
முத்துக்கூத்தன் எங்கு சென்றாலும், தன்னுடன் ஒரு பெட்டியை
எடுத்துச் செல்வது வழக்கம். பொறாமைக்காரர்கள் இதை
வைத்தே அரசனிடம் கோள் மூட்ட எண்ணினர்.

“மகாராஜா, மந்திரி நல்லவர் போல் நடித்து, நம்மை ஏமாற்றுகிறார்.
அரண்மனையில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை எல்லாம்
அபகரித்து தன் பெட்டியில் வைத்துள்ளார். வேண்டுமானால்
அதைச் சோதனை செய்து பாருங்கள்,” என்றனர்.
அரசனுக்கும், சிறிது சந்தேகம் ஏற்பட்டது.
ஒருநாள்- –
வேட்டைக்குப் போகும்போது, மந்திரி வழக்கம் போல் பெட்டியை
தன்னோடு எடுத்து வந்தார்.
“பெட்டியில் என்ன?” என்று கேட்டார் அரசர்.
உடனே மந்திரி, பெட்டியைத் திறந்து காட்டினார், ஆடு மாடு
மேய்ப்பவன் உடுத்தும் கந்தல் துணி இருந்தது.
“இதெல்லாம் என்ன?” என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் அரசர்.
“மன்னா! ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, என் புத்திக்
கூர்மையை பார்த்து மந்திரி ஆக்கினீர். இவ்வளவு உயர் உதவி
கிடைத்தால், சிலர் பழைய நிலைமையை மறந்து விடுவர்.
எனக்கு அப்படியிருக்க மனம் வரவில்லை. பழைய நிலைமையை
சுமந்தபடியே, மந்திரி பதவியில் இருக்க விரும்புகிறேன்.
அதனால் தான், இப்பெட்டியை எந்நேரமும் என்னோடு
வைத்திருக்கிறேன்,” என்றார் மந்திரி.
மந்திரியை பெரிதும் பாராட்டியதோடு, பொறாமைக்காரர்களுக்கு
தக்க தண்டனையும் கொடுத்தார் அரசர். மந்திரிக்கு பல பரிசுகள்
கொடுத்து கவுரவித்தார். சூழ்ச்சியே, தங்களது வீழ்ச்சிக்கு
காரணமானதை எண்ணி வருந்தினர் பொறாமைக்காரர்கள்.

Post a Comment

0 Comments