நீதிக்கதை - கல்லுடைக்கும் தொழிலாளி

தினம் ஒரு நீதிக் கதை

எது சிறந்தது?

ஒரு ஊரில் கல்லுடைக்கும் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவர் ஒரு நாள் நகைக்கடை முதலாளி ஒருவரின் வீட்டின் முன்பாக சென்று கொண்டிருந்தார். அந்த நகைக்கடைக்காரர் வீட்டை மிக அழகாகக் கட்டியிருந்தார்.

அதைப் பார்த்த கல்லுடைக்கும் தொழிலாளி, நானும் இவரைப் போல் நகைக்கடை முதலாளியாக இருந்தால் நானும் அவரைப் போன்று வசதி படைத்தவராக இருப்பேன் என்று நினைத்தார். நினைத்தவுடனேயே, அந்த கல்லுடைக்கும் தொழிலாளி நகைக்கடை முதலாளியாக மாறிவிட்டார்.

மற்றொரு நாள் ஒரு காவல்துறை அதிகாரியை கண்டார். அவருக்கு கிடைக்கும் மரியாதை, அவருடைய பணி ஆகியவற்றை கண்டு நானும் ஒரு அதிகாரம் கொண்ட ஒரு அரசு அதிகாரியாக இருப்பது தான் சிறந்தது என்று நினைத்தார். உடனே காவல்துறை அதிகாரியாக மாறிவிட்டார். 

ஒரு நாள் காவல்துறை அதிகாரியாக நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அவரது உடலின் மேல் பட்ட சூரியனின் வெப்பத்தை அவரால் தாங்க முடியவில்லை. ஆகவே சூரியன் தான் மிகவும் சக்தி வாய்ந்தது. நான் சூரியனாக இருக்கக்கூடாதா என்று நினைத்தார். நினைத்தவுடனேயே, காவல்துறை அதிகாரியாக இருந்தவர், சூரியனாக மாறிவிட்டார்.

ஆனால், அந்த சூரியனையும் பூமி மேல் பிரகாசிக்க முடியாதவாறு கருமேகங்கள் சூரியனை சூழ்ந்ததைப் பார்த்தார். உடனே மேகத்தால் சூரியனையே மறைக்க முடிகிறதென்றால், அந்த சூரியனை விடவும் மேகம் தான் உயர்ந்தது, எனவே நான் மேகமாக மாற வேண்டும் என்று நினைத்தார். உடனே மேகமாக மாறிவிட்டார்.

பிறகு அந்த மேகத்தை வழிநடத்துவது காற்றுதான் என்பதை கண்டார். மேகத்தை விட காற்று தான் பலம் வாய்ந்தது என்று எண்ணியவர், நான் காற்றாக மாற வேண்டும் என்று நினைத்தார். உடனே காற்றாக மாறிவிட்டார்.

காற்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, திடீரென காற்று வேகமாக அடிக்கும் போது எதிர்ப்படும் மலையை காற்றால் அசைக்க முடியவில்லை. காற்றால் அசைக்க முடியாத மலை தான் உலகிலேயே மிகவும் பலம் வாய்ந்தது என்று எண்ணியவர், நான் மலையாக மாற வேண்டும் என்று நினைத்தார். அதன்படியே மலையாகவும் மாறிவிட்டார்.

ஒரு நாள் அந்த மலையின் கீழ்ப்பகுதியில் கொஞ்சம் உடைந்து கீழே விழுந்தது. எப்படி உடைந்து விழுகிறது என்று பார்த்தார். அந்த மலையில் கீழ்பகுதியில் ஒரு கல்லுடைக்கும் தொழிலாளி ஒருவர் கல்லை உளியால் உடைத்துக் கொண்டிருந்தார்.

அதைக் கண்டதும், மலையை விடப் பலசாலி கல்லுடைக்கும் தொழிலாளி தான். எனவே நான் கல்லுடைக்கும் தொழிலாளியாக மாற வேண்டும் என்று நினைத்தார். பழையபடி கல்லுடைக்கும் தொழிலாளியாகவே மாறிவிட்டார்.

நீதி : 

மனிதனின் மனமானது ஒரு இடத்தில் நிலையாக இருக்காது, அதனால் மனதை ஒருநிலைப்படுத்தி, இருப்பதை வைத்து சிறப்பாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments