தினம் ஒரு கதை - அதிக பற்று


     வாழ்க்கையில் நிறைய அனுபவப்பட்ட பிறகு தான் தெரிகிறது யாரோடும், யார் வாழ்க்கையும் முடிந்து போய் விடுவதில்லை. 

      அவரவர் வாழ்க்கையை, அவரவர் வாழ்ந்தேயாக வேண்டும். இது தான் வாழ்க்கை. நாம் கொண்டு வந்தது எதுவுமில்லை. கூட வரப்போவதும் எதுவுமில்லை.

    எதன் மீதும் அதிக பற்றுதல் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் பற்றுதல் துன்பத்தை கொண்டு வருகிறது. 

     ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக் கரையில் இரண்டு பேர் நின்று கொண்டு இருக்கிறார்கள்.

    ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது?
இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது.அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். 

    ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்பட வில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. 

     இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன் குபீர்
என்று ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக் கரையில் சேர்த்து விட்டது.

     அடுத்தவன் பார்த்தான். நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா? என்று எதிர்பார்த்தான். இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது.

    இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான்.

  இந்த மனிதனையும் இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை. திணறியது.
ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்..வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது.

விளைவு ,

    இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டு  இருக்கிறார்கள். அவர்கள் போக வேண்டிய திசை வேறு. போய்க் கொண்டு இருக்கிற திசை வேறு.

     கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது.

  சிலர்,கரையிலேயே நின்றுவிடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். 
சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.

   நீங்கள் கரை சேர விரும்புகிறீர்களா?அப்படியானால்.,
எதையும் பற்றிக் கொள்ளாதீர்கள்.

   ஏற்கெனவே பற்றிக் கொண்டிருப்பதை எல்லாம் விட்டு விடுங்கள்!

     தவறாகப் பற்று கிறவர்கள் தடுமாறிப் போகிறார்கள்.
சரியாகப் பற்று கிறவர்கள் கரையேறி விடு கிறார்கள்.

    பற்றையே விடுகிறவர்கள் மகிழ்வுடன் இருக்கிறார்கள்...

Post a Comment

0 Comments