தினம் ஒரு கதை - கடையனை கடைத்தேற்றுவதே குருவுக்கு பெருமை

ஒரு ஊரில் ஒரு முனிவர் இருந்தார். 

அவர் ஒரு குரு.

அவர் தொடர்ந்து தியான கூட்டங்கள் நடத்துவார். 

அந்தக் கூட்டத்திலே கலந்து கொள்வதற்காக பல ஊர்களில் இருந்தும் சீடர்கள் நிறைய பேர் வருவார்கள். 

ஒரு நாள் அங்கே கூட்டம் நடந்து கொண்டிருந்தது. 

அந்த சமயத்தில் சீடர்களில் ஒருவன் எதையோ திருடி விட்டான். 

மற்ற சீடர்கள் அதை கவனித்து விட்டார்கள். 

இவன் அகப்பட்டுக்கொண்டான்.

கூட்டம் முடிந்த பிறகு இவன் திருடிய விடயத்தை குருவிடம் போய் சொன்னார்கள். 

ஆனால் அவர் இதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. 
கண்டு கொள்ளவும் இல்லை. 
போய் சொன்ன சீடர்களுக்கு எல்லாம் ஏமாற்றமாக இருந்தது.

என்ன இது இவ்வளவு தூரம் நாம் கண்டுபிடித்து சொல்கிறோம். 
அவர் கண்டு கொள்ளவே மாட்டேங்கிறார் என்று ஒரு மாதிரியாக ஆகி விட்டார்கள். 

இருந்தாலும் அதைப்பற்றி ஒன்றும் சொல்லிக் கொள்ளாமல் பேசாமல் இருந்து விட்டார்கள். 

கொஞ்ச நாள் ஆனது அதே ஆள் மறுபடியும் ஒரு திருட்டில் மாட்டிக் கொண்டான். 

சீடர்கள் மறுபடியும் குறிப்பிட்ட விஷயத்தை சொன்னார்கள். அவரும் வழக்கம் போல சும்மாவே இருந்து விட்டார்.

இவர் இப்படி இருப்பதை பார்த்து அந்த சீடர்களுக்கு கோபம் வந்துவிட்டது. 
 
உடனே அந்த சீடர்கள் எல்லாம் ஒன்று கூடி பேசி எல்லோருமாக சேர்ந்து ஒரு விண்ணப்பம் தயார் செய்தார்கள். 

அதை குருநாதரிடம் கொண்டு போய் கொடுத்தார்கள். 

அந்த விண்ணப்பத்தில் இவர்கள் என்ன எழுதியிருந்தார்கள் தெரியுமா? 

குருநாதர் அவர்களே உடனே திருடியவன் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இந்த இடத்தை விட்டு அவனை துரத்தி விட வேண்டும்.
நீங்கள் அவனை வெளியே அனுப்புங்கள் இல்லை என்றால் நாங்கள் அத்தனை பேரும் வெளியே போய் விடுகிறோம். இப்படித்தான் அந்த விண்ணப்பத்தில் எழுதி இருந்தது.

குரு அந்த விண்ணப்பத்தை வாங்கி படித்துப் பார்த்தார். 
அதன் பிறகு அதை எழுதிய அத்தனை பேரையும் கூப்பிட்டார்.

எல்லோரும் இப்படி வாருங்கள் என்றார். 

இப்படி என் எதிரில் உட்காருங்கள் என்றார். 

அதன் பிறகு சொன்னார்...
இதோ பாருங்கள் நீங்கள் எல்லோரும் புத்திசாலிகள். உங்களுக்கு எது நல்லது எது கெட்டது என்ற விடயம் நன்றாகத் தெரியும். 
நீங்கள் மேற்கொண்டு ஏதாவது படிக்க வேண்டும் என்று நினைத்தால் வேறு எங்கே வேண்டுமானாலும் போகலாம். அதற்கு நான் தடை சொல்ல மாட்டேன். 
ஆனால் உங்களாலே குற்றம் சாட்டப்பட்டவன் எப்படி என்றால் அவனுக்கு எது நல்லது எது கெட்டது என்றெல்லாம் தெரியாது. அதனால்தான் திருடினான்.

நீங்கள் சொல்வது மாதிரி அவனை அடித்து துரத்தி விட்டால் அவனுக்கு எப்படி நல்லது கெட்டது தெரியும்? அவனுக்கு அதை யார் சொல்லிக் கொடுப்பது? அதனால் அவன் இங்கே இருக்கட்டும். 
அதுதான் சரி. 
இதற்காக நீங்கள் எல்லோரும் என்னை விட்டுப் போனாலும் சரி அவனை நான் விரட்ட மாட்டேன் என்றார்.

இவ்வளவையும் திருடிய அந்த சீடன் கேட்டுக் கொண்டிருந்தான். 
அவன் கண்களில் கண்ணீர் அப்படியே எழுந்து வந்து குருவின் காலில் விழுந்தான். 

அவன் கண்ணீரில் அவனது தீமை கழுவப்பட்டது. 
சீடர்களுக்கு குருவின் பெருமை புரிந்தது.

இதே போல்தான் ஒரு ஆசிரியர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் , நன்றாக படிக்கின்ற மாணவனுக்குதான் பாடம் சொல்லிக் கொடுத்தேன்.
அவன் சிறந்த மதிப்பெண்கள் பெற்றான் என்பதில் என்ன பெருமை இருக்கிறது.

அது பெரிய விஷயமா? 

இல்லை!

மோசமாக படிக்கின்ற மாணவனையும் சிறந்த நிலைக்கு கொண்டு வரவேண்டும். 
அதுவே குருவுக்கு பெருமை.

Post a Comment

0 Comments