தினம் ஒரு கதை - மன உறுதி

"மன உறுதி"

  _*ஓர் புகழ் பெற்ற வில்வித்தைக்கார சென் துறவி இருந்தார். அவரிடம் போட்டியிட ஓர் திறமை வாய்ந்த இளம் வில் வித்தைக்காரர் முன்வந்தார்.*_

_துறவிக்கு சவால் விடக் கூடியவராய் அந்த இளம் வில்வித்தை வீரர் இருந்தார். இருவரும் பல போட்டிகளிலும் வென்று முன்னேறினர்._

_*தூரத்தில் இருக்கும் ஒரு மாட்டு பொம்மையின் கண்ணில் மிகச் சரியாக முதல் அம்பால் அடித்து, பின் அடுத்த அம்பால் அந்த அம்பையே இரண்டாய்ப் பிளந்து சாதனை செய்து காட்டினார் இளம் வீரர்.*_

_‘அருமை’ என்று பாராட்டிய துறவி,‘ என்னுடன் ஒரு இடத்துக்கு வா. அங்கு வந்து ஜெயிக்க முடிகின்றதா? என்று பார்ப்போம்’ என்றார்._

அடக்க முடியா ஆவலுடன் துறவியைப் பின் தொடர்ந்தார் இளம்வீரர்.

ஒரு பெரிய மலைச்சிகரத்தில் ஏறிய துறவி,மிக உயரத்தில் இரண்டு மலைகளின் இடையே நடந்து செல்வதற்காக போடப்பட்டிருந்த சின்னஞ் சிறிய மரப்பாலத்தின் நடுவில் சென்று நின்றார்.

பாலம் ஒருவர் மட்டுமே செல்ல முடிந்ததாய் இருந்தது. கீழே பாதாளம். கொஞ்சம் சறுக்கினால் மரணம் நிச்சயம்.

தன் வில்லை எடுத்த துறவி, அம்பைத் தொடுத்து தூரத்தில் இருந்த ஒரு மரத்தின் கனியில் மிகச் சரியாக அடித்தார்.

‘இப்போது உன் முறை’ என்றபடி பாலத்தில் இருந்து மலைப் பகுதிக்குச் சென்று நின்று கொண்டார்.

இளம் வீரருக்கோ கை, கால் எல்லாம் உதறியது. கனியியை சரியாக அம்பால் எய்ய முடியவில்லை.

அவரது முதுகைத் தடவிக் கொடுத்த துறவி,உன் வில்லில் இருக்கும் உறுதி, மனதில் இல்லை.’ என்றார்.

உடம்பு வலிமை பெற வேண்டுமானால் மனம் வலிமை உடையதாக இருக்க வேண்டும்..

மன உறுதி உடையவர்கள் நினைத்ததை நினைத்தபடி அடைய முடியும்.

மன அமைதியைப் பொறுத்தே உங்கள் செயல் உறுதி அமைகிறது. மன உறுதி உடையவர்கள் துன்பத்தில் துவள்வதில்லை.

மன உறுதி உடையவர்களால் தான் பிறர்க்கு உதவ முடிகிறது. மன உறுதி இல்லாதவர்களை உலகம் ஒதுக்கி விடுகிறது

Post a Comment

0 Comments