பணிக்கு வராமல் சம்பளம் பெற்ற ஆசிரியைக்கு விருப்ப ஓய்வு



 அரசு பள்ளி ஒன்றில் பாடம் நடத்த, சம்பளத்துக்கு ஆள் வைத்த ஆசிரியைக்கு விருப்ப ஓய்வு கொடுத்து, பள்ளிக் கல்வித்துறை வினோத நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

கோவை மாவட்டம், பேரூர் பகுதியில் உள்ள ஆலாந்துறை அரசு மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியை ஒருவர், ஒன்றரை ஆண்டுகளாக பணிக்கு வராமல், பட்டதாரி ஒருவரை சம்பளத்துக்கு அமர்த்தி, பாடம் நடத்த வைத்தார்.

அதேநேரம், அவ்வப்போது வந்து, வருகைப் பதிவேட்டில் மொத்தமாக கையெழுத்து போட்டு, சம்பளம் பெற்றுள்ளார்.

அவரை பார்த்து மற்றொரு ஆசிரியையும், வேறு ஒருவரை சம்பளத்துக்கு வைத்து, இரண்டு வாரங்களாக பணிக்கு வராமல், அரசு சம்பளம் பெற்றுள்ளார்.

இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட ஆசிரியைகள், வேறு ஆசிரியர்களுடன் மொபைல் போனில் உரையாடிய ஆடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வெளியானது.

இதுகுறித்து, கடந்த ஆண்டு அக்டோபரில், நம் நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நடத்திய விசாரணைக்கு பின், அந்த ஆசிரியைக்கு விருப்ப ஓய்வு அளிக்க முடிவானது.

ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால், உடந்தையாக இருந்ததாக, தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மீதும் விசாரணை பாயும் என்பதால், அதை தவிர்த்து விட்டனர்.

கடந்த, 11ம் தேதி பிரிவு உபசார விழா நடத்தி, அந்த ஆசிரியைக்கு ஓய்வு அளித்துள்ளனர்.

Post a Comment

0 Comments