தினம் ஒரு நீதிக்கதை- மனதை உடைக்காதீர்கள்

 

எடிசன் மின்சார பல்பை கண்டுபிடித்த பிறகு தன் நண்பர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் அந்த பல்பை ஒளிர வைத்து காட்டுவதற்காக ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார். அவரது ஆய்வகத்தின் மேல் தளத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

எடிசன் தனது உதவியாளரை அழைத்து மின்சார பல்பை மேல் தளத்திற்கு கொண்டு வரச் சொன்னார். அந்த உதவியாளர் பல்பை கொண்டு வருகையில் அது கை தவறி கீழே விழுந்து உடைந்துவிட்டது. அங்கிருந்த எல்லோரும் அதிர்ச்சி அடைந்தார்கள். உதவியாளரும் பதற்றம் அடைந்து விட்டார். ஆனால் எடிசனும் எந்த பதற்றமும் அடையவில்லை.

ஆயிரம் தோல்விகளை சந்தித்து மின்சார பல்பை உருவாக்கிய அவருக்கு மீண்டும் ஒரு மின்சார பல்பை உருவாக்குவது மிகவும் எளிதாக இருந்தது. சிறு முயற்சி செய்து மீண்டும் ஒரு பல்பை உருவாக்கினார். அதை மீண்டும் அதே உதவியாளரிடம் கொடுத்து மேலே கொண்டு வரச்செய்தார்.

பல்பை கீழே போட்டு உடைத்த அவரிடமே அதை மீண்டும் கொடுக்கிறீர்களே என்று சிலர்  ஆச்சரியப்பட்டு எடிசனிடம்  கேட்டார்கள்.

அந்த பல்ப் மீண்டும் உடைந்தாலும் என்னால் இன்னொரு பல்பை உருவாக்க முடியும். ஆனால் என்னுடைய உதவியாளரின் மனதை உடைத்து விட்டால் அதை என்னால் சரிசெய்ய முடியுமா? முடியவே முடியாது! அதனால் தான் மீண்டும் அவரிடம் அதே பணியை கொடுத்தேன். அவர் அவரது பணியையும்,  அவரது பொறுப்பையும் என்னுடைய நம்பிக்கையும் நன்றாக உணர்ந்து மீண்டும் வேலை செய்வார். என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என்றார் எடிசன்.

அப்போதுதான் எடிசனுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்த அந்த பொறுமையின் முக்கியத்துவத்தையும் அங்கிருந்த அனைவரும் உணர்ந்தார்கள்.

எடிசன் ஆயிரம் முறை தோல்வி கண்டு ஒரு மின்சார பல்பை கண்டுபிடித்தார். அந்த பல்பை தனது உதவியாளரின் கை தவறி விழுந்து உடைந்ததற்காக எடிசன் திகைக்கவில்லை. நொந்து போகவில்லை. அந்த அதிர்ச்சிகரமான நிமிடங்களில் கூட அமைதியாக நடந்து கொண்ட நேர்மறை சிந்தனை உள்ள ஒரு அற்புதமான மனிதர் எடிசன்.

Post a Comment

0 Comments