வரலாற்றில் இன்று டிசம்பர் 17ஓய்வூதியர் தினம் டிசம்பர் 17 - Article

'அரைக்காசு உத்தியோகம் என்றாலும் அரசு உத்தியோகம்' என்பது பழமொழி. இப்படி சொல்வதற்கு காரணம் அரசு பணி கிடைத்தால் பணிப் பாதுகாப்பு மற்றும் நிரந்தர வருமானம் கிடைக்கும் என்பதே ஆகும். அரசு வேலை பார்க்கும் போது சம்பளம் வழங்குவது சரிதான். ஓய்வு பெற்று வீட்டில் சும்மா இருக்கும் போதும் ஓய்வூதியம் என்ற பெயரில் சம்பளம் வழங்குவது என்ன நியாயம்? என்ற கேள்வி எழத்தான் செய்யும். அப்படி என்றால் ஓய்வூதியம் என்பது அரசு வழங்கும் கருணை தொகையா அல்லது அரசு ஊழியரின் உரிமையா என்பதை பார்க்க வேண்டும்.

#மன்னராட்சி முதல்...இங்கு மன்னராட்சி நடந்தபோது அரண்மனையிலும், அரசாங்கத்திலும் வேலை செய்தவர்களுக்கு மாதாந்திர அல்லது வருடாந்திர ஊதியமாக தானியம் அல்லது பணமாக வழங்கும் நடைமுறை இருந்தது. பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் ஓய்வூதியமோ அல்லது இறந்த ஊழியரின் குடும்பத்திற்கு குடும்ப ஊதியேமோ வழங்கப்பட்டதாக தகவல் ஏதும் இல்லை. மன்னருக்காகவும், நாட்டுக்காகவும் உயிர் தியாகம் செய்த ஊழியரின் குடும்பத்திற்கு வீடுகள், நிலம் என மானியம் வழங்கப்பட்டதாக மட்டும் சில வரலாற்று பதிவுகள் உண்டு.அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் என்பது இந்திய தேசத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது 1857க்கு பின் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
1871ம் ஆண்டு அன்றைய பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் 'இந்திய ஓய்வூதிய சட்டம் - 1871' இயற்றி சட்டப்பூர்வமாக்கப்பட்டது. அந்த சட்டத்தில் 'ஓய்வூதியம் என்பது அரசு வழங்கும் கருணை தொகை அது அரசு ஊழியர் அடிப்படை உரிமை இல்லை' என குறிப்பிடப்பட்டுள்ளது. விடுதலைக்கு பின்னரும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது.'ஓய்வூதிய' பிதாமகன்மத்திய பாதுகாப்புத் துறையில் சட்ட ஆலோசகராக பணியாற்றிய டி.எஸ்.நகரா என்பவர் 1972ல் தமது பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

அவருக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியத்தில் சில முரண்பாடுகளும், சிக்கல்களும் இருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கில் 1982ல் டிச.,17ல் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு டி.எஸ்.நகராவுக்கு தகுதியான ஓய்வூதியம் வழங்கி தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில் 'ஓய்வூதியம் என்பது அரசின் கருணை தொகையோ நன்கொடையோ அல்ல; ஒரு அரசு ஊழியர் பல ஆண்டு காலம் அரசுக்கும், மக்களுக்கும் பணியாற்றியமைக்காக பெறும் உரிமை தொகையாகும்' என்று குறிப்பிட்டதுடன் 'அரசு ஊழியர் ஓய்வு பெற்ற பின் அமைதியாக, கவுரவமாக வாழ்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்' என்றும் ஆணித்தரமாக தீர்ப்பளித்தது.

ஓய்வூதிய தினம்அந்த தீர்ப்பின் அடிப்படையில் தான் தற்போது ஊதியக் குழு அமைத்து பணியில் இருப்பவர்களின் ஊதியம் திருத்தி அமைக்கப்படும் பொழுதெல்லாம் ஓய்வூதியமும் திருத்தி அமைக்கப்பட்டு வருகிறது. பணியில் இருப்பவர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் போதெல்லாம் ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறது. இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட டிச.,17ம் நாளை 'ஓய்வூதியர் தினமாக' அரசு ஊழியர் சங்கங்கள் கொண்டாடுகின்றன.

ஓய்வூதியம் என்பது அரசு துறையில் பணி நிறைவு பெற்ற ஊழியர்களுக்கு மாதந்தோறும் அரசு வழங்கும் தொகை. அரசு ஊழியர், அரசு மற்றும் உதவிபெறும் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர், ஊழியர், உள்ளாட்சி நிறுவன ஊழியர், பொதுத்துறை நிறுவன ஊழியர், வயது முதிர்வின் காரணமாக ஓய்வு/விருப்ப ஓய்வு பெற்று எஞ்சிய வாழ்க்கையில் பொருளாதார நிலையை ஈடுகட்டும் வகையில் மாதந்தோறும் வழங்கப்படுகிறது.கணக்கிடுவது எவ்வாறு ஓய்வூதிய விதிப்படி அரசு ஊழியர் பணிபுரிந்த காலத்தையும், கடைசியாக பெற்ற ஊதியத்தையும் அடிப்படையாக கொண்டு ஓய்வூதியம் கணக்கிடப்படுகிறது.

பணிக்காலத்தில் அரசு ஊழியர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தாலோ, குற்றச்சாட்டு நிலுவையில் இருந்தாலோ, நீதிமன்றத்தால் தண்டனை பெற்றாலோ ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படும். அரசுக்கோ அரசு சார்புடைய நிறுவனத்திற்கோ இழப்பு உருவாக்கி அல்லது நாட்டின் அமைதிக்கும், உரிமைக்கும் பங்கம் விளைவிக்கும் வகையான குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலோ ஓய்வூதியம் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நிறுத்தி வைக்கப்படும்.

மத்திய அரசு 2004 ஜன.,1 முதல் முப்படையில் சேர்ந்தவர் தவிர இதர அரசு ஊழியர்களுக்கும், தமிழகத்தில் 1.4.2003 முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கும் பங்களிப்பு ஓய்வூதியம் திட்டத்தின் படி ஓய்வூதியம் கணக்கிட்டு வழங்கப்படுகிறது. இதை அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.அடிப்படை உரிமையாஇதில் உள்ள இயற்கை நீதி என்னவென்றால் தனது இளமைக் காலம் தொடங்கி 58 அல்லது 60 வயது வரை அரசுக்கும், மக்களுக்கும் சேவை உணர்வோடு பணியாற்றிய அரசு ஊழியர் ஓய்வு பெற்றபின் தனது முதுமை காலத்தில் நிராதரவாக விடப்படாமல் அமைதியாகவும், கண்ணியமாகவும் வாழ உதவி செய்வது ஓய்வூதியம் தான்.

இந்த ஓய்வூதியமும் அரசு கருவூலத்தில் இருந்து அரசால் தானமாக தரப்படும் தொகை அல்ல. அரசு ஊழியரின் பணிக் காலத்தில் அவரது ஊதியத்தில் இருந்து பிடிக்கப்பட்ட தொகையில் இருந்து வழங்கப்படுவதால் ஓய்வூதியம் என்பது 'அரசு வழங்கும் கருணை தொகை அல்ல; அது ஒவ்வொரு அரசு ஊழியரின் அடிப்படை உரிமை' என்பதே சரியானதாகும்.-

Post a Comment

0 Comments